போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா-உக்ரைன் பேச்சு ஆரம்பம்!

ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக உக்ரைன் அதிகாரிகள் பெலாரஸ் சென்றடைந்துள்ளனர்.

அத்துடன், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய தூதுக்குழு பெலாரஸ் வந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது.

உக்ரைன் - பெலாரஸ் எல்லைக்கு அருகில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

போர் நிறுத்தத்தை அமுல்படுத்தும் முன்பாக, உக்ரைன் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் முன்னர் நிபந்தனை விதித்திருந்தது. இதே கோரிக்கை இந்தப் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் இருதரப்பு நலன்களுக்கும் ஏற்ற ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு ரஷ்யா ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரம் மதியம் 12 மணிக்கு (0900 GMT) பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மெடின்ஸ்கி கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக ரஷ்யா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உக்ரைன் தலைநகரிலும் மற்ற நகரங்களிலும் ரஷ்யப் படைகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே ரஷ்யா -உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகின்றது.
Previous Post Next Post