(திருத்தம்) யாழில் புகையிரதம் மோதி விபத்து! சிறுவன் உயிரிழப்பு!! தந்தையும் சகோதரனும் படுகாயம்!!! (வீடியோ)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் - பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் வயது 12 எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த ரயில், கொடிகாமம், மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டா ரக வாகனத்தில் பயணித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தையும், சகோதரனும் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை முன்னதாக சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நின்றிருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விபத்தில் மூவரும் உயிரிழந்துவிட்டதாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்த நிலையில் மூவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post