யாழில் போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!


ஊசி மூலம் அளவுக்கதிகமான போதைப் பொருளை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனுடன் போதைப் பொருளை எடுத்துக்கொண்ட மேலும் 3 இளைஞர்களை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞனும் , அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர்.

நண்பர்கள் மூவரும், போதைப்பொருளை உட்செலுத்திய பின்னர் மிகுதியான போதைப்பொருளை முழுவதுமாக உயிரிழந்த இளைஞன் உட்செலுத்தியுள்ளார். அவ்வாறு அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் மயக்கமுற்று விழுந்த இளைஞனை,

போதையில் மயங்கி உள்ளதாக நினைத்து , போதை தெளியும் என காத்திருந்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் ஆகியும் இளைஞன் அசைவற்று காணப்பட்டமையால் , இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோப்பாய் பொலிஸார், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய ஏனைய மூவரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள மூவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். ஏனைய மூவரையும் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்தலே அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் நபர்களை அடையாளம் காணமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலமாக உட்செலுத்தியதில் இதுவரை 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post