யாழ்.நோக்கிப் பயணித்த அரச பேருந்து கவிழ்ந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி - பளை ஏ-9 வீதி, முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இன்று (21) மாலை 6 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

முள்ளியடி பகுதியில் ஏ-9 வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு தடம்புரண்டுள்ளது.

இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த மீசாலையைச் சேர்ந்த 33 வயதான குமுதினி என்பவரே உயிரிழந்ததுடன், 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடுமையான காயங்களுக்குள்ளான 4 பேர் ஆபத்தான நிலையில் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post