கிளிநொச்சியில் பயங்கரம்: மரண வீட்டில் வாள்வெட்டு! 4 பிள்ளைகளின் தந்தை பலி!! மூவர் படுகாயம்!!! (படங்கள்)

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மரணவீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.

15 க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழு ஒன்று உயிரிழந்தவரின் சகோதரனை வெட்டுவதற்கு வந்துள்ளதாக அறிந்த நபர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த குழு உள்ளுர் துப்பாக்கி மூலம் மேல் வெடி வைத்ததுடன், வாளினால் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவை சேர்ந்த ஒருவருமாக நால்வர் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மூன்று சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை மற்றய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர். இஸ்மத் ஜமீல் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சம்பவம் தொடர்பான பூர்வாங்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிசாரை பணித்தார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட குடும்பத்தினருடன் மாடு ஒன்றை வெட்டிய சம்பவத்துடன் இவ்வாறான வாள்வெட்டு சம்பவம் கடந்த 2 வருடமளவில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post