அமெரிக்காவின் 2 வங்கிகள் அடுத்தடுத்துச் சரிவு! ஐரோப்பாவிலும் உடனடியாகவே எதிரொலித்தது!!

அமெரிக்காவின் இரண்டு வங்கிகள் அடுத்தடுத்துச் சரிவச் சந்தித்ததை அடுத்துப் பரந்த அளவிலான நிதி நெருக்கடி தோன்றலாம் என்ற அச்சம் அங்கு எழுந்துள்ளது. இரண்டு வங்கிகளினதும் அனைத்து வைப்புகளுக்கும் அமெரிக்க அரசு உடனடியாக உத்தரவாதம் வழங்கியுள்ளது.

உலகெங்கும் தொழில்நுட்பக் கம்பனிகளுக்குக் கடன் வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த" சிலிக்கொன் வாலி" வங்கியும் (Silicon Valley Bank) நியூயோர்க்கின் "சிக்னேச்சர்" வங்கியும் (Signature Bank) ஓரிரு நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து பெரும் சரிவைச் சந்தித்ததை அடுத்தே அமெரிக்க வாடிக்கையாளர்களிடையே தங்கள் சேமிப்புத் தொடர்பான அச்ச நிலை தோன்றியுள்ளது.

இதனையடுத்து அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் வங்கிக் கட்டமைப்புப் பாதுகாப்பாக உள்ளது. அதன் மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இரண்டு வங்கிகளையும் நிமிர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் அமெரிக்கா செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

"சிலிக்கொன் வாலி" வங்கி (Silicon Valley Bank) கடந்த வெள்ளியன்று அமெரிக்க அதிகாரிகளால் மூடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க வங்கி ஒன்றின் மிகப் பெரிய தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.

திடீரென அதன் வாடிக்கையாளர்கள் பெரும் எடுப்பில் மீளப் பெற்றதை அடுத்தும் (massive withdrawals) புதிய நிதி வசூல்களைச் செய்வதற்கு வங்கி மேற்கொண்ட இறுதி நேர முயற்சிகள் தோல்வி கண்டதை அடுத்துமே "சிலிக்கொன் வாலி" வங்கி திவாலானது. கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட அந்த வங்கியின் சரிவை அடுத்து அச்சமடைந்த வாடிக்கையாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கிளைகளை முற்றுகையிட்டுத் தமது சேமிப்புகளை மீளப் பெற முண்டியடித்தனர்.

அமெரிக்க வங்கிகளின் சரிவு ஐரோப்பாவிலும் உடனடியாகவே எதிரொலித்தது. பாரிஸ், லண்டன் உட்பட முக்கிய நகரங்களில் பங்குச் சந்தைகளில் குறிப்பிடக் கூடிய வீழ்ச்சிகள் காணப்பட்டன. பிரான்ஸின் வங்கிக் கட்டமைப்புகளில் இது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நிதி அமைச்சர் புரூனோ லு மேயர் முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
Previous Post Next Post