![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAL9VKl0-VOZlPNcI22JQkqRSJv968ZAj_fVMulopDhkE0tPdf7XTw2atQOBfWgs9Vwp35dP0rISykaKACTT1IzQFrNyvqdDq9rt5VsIh6BVMw7781IjmAAbFk-SWT7dLitceS750A1SybT3KdQ9hNYVcfvIXLNHpjWwJKR6ezbTbeCTVJNAhYievT/s16000/e1ea69_7e80e38db88b40b3997952ea02582094_mv2.jpg)
அரசுத் தலைவர் மக்ரோன் ஓய்வூதியச் சட்டம் தொடர்பாக வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பின்னர் எதிர்ப்பாளர்களது பிரதான இலக்காக மாறியிருக்கிறார்.
நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்ற போராட்டங்களில் ஆத்திர உணர்வும் வன்முறைப் போக்கும் மேலோங்கிக் காணப்பட்டது.
தென்மேற்கு நகரமான போர்தோவில் (Bordeaux) நேற்றிரவு நகர மண்டபத்தின் முன்பாகக் கலகம் அடக்கும் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு கட்டத்தில் நகரசபை மண்டபத்தின் நுழைவாயில் கதவுக்குத் தீ மூட்டப்பட்டது. புகழ்பெற்ற மண்பட வாயில் தீப்பற்றி எரிகின்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. தீயணைப்புப் படையினர் விரைந்து தீயை அணைத்துவிட்டனர்.
மக்ரோன் அரசு அரசமைப்பின் 49.3 பிரிவைப் பயன்படுத்தி ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற வழிமுறைகளை மீறி நிறைவேற்றியதால் ஆத்திரமடைந்த மக்கள் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மாபெரும் பேரணிகளில் அணி திரண்டு பங்கேற்று வருகின்றனர். இன்னொரு புறத்தில் பொலீஸார் மற்றும் பொதுச் சொத்துகள் மீதான வன்முறையும் தீவிரமடைகின்றது.
நாடெங்கும் உருவாகியுள்ள அமைதியின்மையை அடுத்து அரசுத் தலைவர் மக்ரோன் அது தொடர்பாகத் தொலைக்காட்சிக்கு அளித்த விசேட செவ்வியில், மக்களது நியாயமான கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல், ஓய்வூதியச் சட்டத்தின் அவசியம் பற்றியும் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றவாறும் கருத்துக்களை அள்ளி வீசி எறிந்து "எரியும் நெருப்பில் எண்ணெய்" ஊற்றியுள்ளார் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. அதன் எதிரொலியாக நேற்றைய பேரணிகளில் ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை விடவும் மக்ரோன் எதிர்ப்புக் கோஷங்களே அதிகம் ஒலித்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று வியாழக்கிழமை நாடெங்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த பேரணிகளில் சுமார் 35 லட்சம் பேர் (3.5 million) திரண்டனர் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 7 ஆம் திகதி நடந்த பேரணி போன்று இந்த எண்ணிக்கை மிக உச்ச அளவு என்று தொழிற்சங்கத் தலைவர்கள் வியந்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரம் நேற்றைய பேரணிகளில் நாடு முழுவதும் பத்து லட்சம் பேரே (1.089 million) பங்குபற்றினர் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது. பாரிஸில் நேற்று பேரணிகள் நடந்த இடங்களில் மிக அதிக எண்ணிக்கையானவர்கள் திரண்டிருந்தனர். சுமார் பத்து லட்சம் பேர் பாரிஸில் பங்கேற்றுள்ளனர் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை-அடுத்த பத்தாவது எதிர்ப்பு நாளாக எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையை-பிரிட்டிஷ் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் பாரிஸுக்கு விஜயம் மேற்கொள்கின்ற தினத்தைத்-தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அன்றைய தினம் வீதிப் பேரணிகளும் வேலை நிறுத்தங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIPl_4TRCXfY5IlEpdKn5m_slEBiZwj5jXmSxwsecH0-UVBjYyPskjZzPr27SKbyrKifPh6jxnZ-Xuj9Lg_idy9nlIFgIozIkNgKH60Z9GqvsIpWcLMaLL2R0tVDCaWZADcx1iRVy85srG-Dx4dl7S6M588VAS6jDv7UOB9t0BLSD34lRH6gk2pCtT/s16000/e1ea69_1c8f0e3b95bb456cbf75a09440b89821_mv2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibe8Zp0J_BxezUhEbDDxxpCK5BaV--KNfilWkvXuxtcXXKyYbI7PUq7y0Acr_OFwBHiJtPfGC9t9Jr_x491sfnuwnLBBn_qQJ7gnut87a7u1lOugBKpJDFUrFeAiQNwX--G87BCsHFncoO8nVwrEFVACiYyrARgJypX4PoimyQWIZXucOE8uvEojbm/s16000/e1ea69_6a31c875cb7041d19fb8ac9f6d676c3d_mv2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUj7MFE9yrNm581k-KZtz_9LU_ldutO81B8jy_MLE04yKx3gp7PHSEv-FIh2CtsO9q7oQqYuW27Zl5hsG99hoKFh5PAHm_5gVBgimfZytSYzgWJpCPGZAg-mPn8nJCD2T8Tn9mlQcgGEaVZP5DfByYV5dA5maDwnruWdDWR7tUtdMc2DqB1jRYp5UQ/s16000/e1ea69_d1182c2e9e3742e6b87a966ee38e331d_mv2.jpg)