![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw2TlV1sArZXILrVO8gdIuUSX4QUbhodsD4y6JhXjLUYhc0rqUT4NNI9qFyRImKTzDVfKf6rDYvnOnrzgISrS9XnnRoHzfU--Itj2itpk0YXuOjFAYAnkkT_71nUGnJeChmWwCj9sO1k3aDYsFQVwPEqplrw-ur12rXJLJNHAsEIMnZKh2DprgmD7d/s16000/e1ea69_162be8bb2cd1429ca2e63ad3cac8035c~mv2.jpg)
அங்கு சிக்குண்டிருந்த ராஜதந்திரிகள், தூதரகப் பணியாளர்கள் உட்பட சுமார் 250 பிரெஞ்சுப் பிரஜைகளை மீட்டு வான் வழியாக அயல் நாடொன்றுக்கு இடம்மாற்றும் "விரைவுப் படை நடவடிக்கை" ஒன்றைப் பாரிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளது. மோதலில் ஈடுபட்டிருக்கின்ற சூடானிய இராணுவம் மற்றும் "விரைவு ஆதரவுப் படைகள்" என அழைக்கப்படும் (Rapid Support Forces - RSF) துணைப்படை ஆகிய இரு தரப்புகளினதும் இணக்கத்துடன் இந்த மீட்புப் பணி இடம்பெறுவதாக பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆபத்தான இந்த நடவடிக்கையின் போது பிரான்ஸின் தூதரகத்தில் இருந்து காட்டூம் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட வாகன அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்புகளும் மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தி உள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilrNtrbFnPs2CL3KWyJQ5XfYNH8aW5GBAGrC-TtAKHjlqiXjmFDgyHXUN7Mg_n3pH6e3P9_E7F12KAs4n5BFnpER8W7iD0LTK-KgsZpkAOX1QkVoHSyXnjSkbmQhY0YtVqzrxF841QTX7WnghNil1aV5kAqOUhFu3eUJwALFkHXsPBSH8CPUJ3WsJr/s16000/e1ea69_d5897f3c29114e8d8ea399b1d097ccc4~mv2.jpg)
தொடரும் தாக்குதல்களுக்கு மத்தியில் சுமார் 200 பேர் அடங்கிய முதலாவது தொகுதியினர் காட்டூம் (Khartoum) விமான நிலையத்தில் இருந்து இராணுவ விமானம் மூலம் சூடானின் எல்லையில் உள்ள ஜிபூட்டி (Djibouti) நாட்டில் அமைந்திருக்கும் பிரெஞ்சுப் படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது அணியில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 300 பேரைப் பிரெஞ்சுப் படையினர் வெளியேற்றியுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCsqCPGWi-R_UnEFNmXoiy__blBe-p-zXpXqGzVUlZXnQ2Od2gFF1OV7X9KrJFR9AMYagpqZxKg0xJeEyHrz4zuGgKiO7dT3XiaGWxB2pbp6VFEhqBHnurpKP0fqrI_v9SC4SXHgNs8CVf4yAI4Iu81xDQmuarPEwDaffjn3debYoG9wIF0BznUaTf/s16000/e1ea69_664390d88d1e41ff897ec25a3bfdf62d~mv2.jpg)
ராஜதந்திரிகளும் பணியாளர்களும் வெளியேறியதைத் தொடர்ந்து பிரான்ஸின் தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பாரிஸில் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சூடானில் கடுமையான மோதல்கள் இடம்பெறுகின்ற தலைநகர் காட்டூமில் (Khartoum) அமெரிக்கத் தூதரகத்தில் சிக்குண்டிருந்த நூறு பேர் வான் வழியாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் மூன்று ராணுவக் ஹெலிக்கொப்டர்கள் சனியன்று இரவு தூதரகப் பகுதியில் தரையிறங்கி ராஜதந்திரிகள் உட்பட அனைவரையும் பாதுகாப்பாக மீட்டன. நெதர்லாந்து துருக்கி, ஜேர்மனி, இத்தாலி உட்படப் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சூடானில் தங்கியுள்ள தத்தமது பிரஜைகளைப் பாதுகாப்பாக மீட்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இங்கிலாந்து அதன் ராஜதந்திரிகளை தலைநகரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.
தலைநகரின் விமான நிலையம் சண்டை நடைபெறும் களமாக மாறியுள்ளதால் வான்வழி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
ஐ. நா. உட்பட சர்வதேச நாடுகள் போரை நிறுத்த முயன்ற போதிலும் போர் நிறுத்தங்கள் வெற்றியளிக்கவில்லை.
வட கிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில் தற்சமயம் மூண்டுள்ள மோதலை"ஜெனரல்களின் போர்" என்று அழைக்கக் காரணம் என்ன?
நாட்டின் அதிகார மையத்தில் இரண்டு ஜெனரல்கள் உள்ளனர். ஒருவர் நாட்டின் வழக்கமான ஆயுதப் படைகளுக்குத் தலைமை தாங்கும் ஜெனரல் அப்தெல் ஃபத்தாஹ் அல்-புர்ஹான்(Abdel Fattah al-Burhan). அடுத்தவர் இராணுவத்துக்கு நிகராகக் கட்டியெழுப்பப்பட்ட பெரும் பலம் வாய்ந்த துணைப்படைக்குத் (Rapid Support Forces - RSF) தலைமை வகிக்கின்ற ஹெமெட்டி(Hemedti) என்று அழைக்கப்படும் ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ(Mohamed Hamdan Dagalo).
இவ்விரு ஜெனரல்களுக்கும் இடையிலான மேலாதிக்க அதிகாரப் போட்டியே சூடானில் தற்போது வெடித்துள்ள மோதலின் அடிப்படை ஆகும். அதனாலேயே இந்த நெருக்கடியை"ஜெனரல்களின் போர்" என்று அழைக்கின்றனர். இவர்கள் இருவரும் சூடானின் சர்வாதிகாரியாக மூன்று தசாப்த காலம் அதிகாரத்தில் நீடித்த ஜனாதிபதி உமர் அல் பஷீரின் (Omar al-Bashir ) ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த 2019 மக்கள் புரட்சிக்குப் பின்னால் ஒன்றாகச் செயற்பட்டவர்கள். பஷீரின் ஆட்சி முடிவுக்கு வந்ததும் நாட்டில் சிவில் அரசாங்கம் ஒன்றை நிறுவும் நோக்கில் இடைக்கால ஆட்சிச் சபை ஒன்று மேற்குலகின் ஆதரவோடு அமைக்கப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxaUPpx-41mVqonJXY347usXxmEfeN7wtvlasLPhc9y8Mx2tB3tPwuKbFIg9wR8q44JvjvNbLqsqodIeEEzpFAvSqlBTr9eovoxL_afuR4PLe7tak7vXqL2ulWPwAN_WaN7q0RqikUujdtTiEaMGNx33HfRGKd30beN93F0AW92UqelkMMGfDhHvRP/s16000/e1ea69_d9a63a2ff80748c4bf2999be755108fa~mv2%20(1).jpg)
அந்த சபை ஊடாக ஆட்சியை ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்கின்ற பயணத்திலேயே இரண்டு ஜெனரல்களுக்கும் இடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியது.
ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ (Mohamed Hamdan Dagalo) தலைமையில் செயற்படுகின்ற -சுமார் ஒரு லட்சம் பேரைக் கொண்ட - ஆர்எஸ்எப் துணைப்படையை (Rapid Support Forces - RSF) நாட்டின் தேசிய இராணுவத்தோடு இணைப்பது என்ற இணக்கப்பாட்டிலும் இரு ஜெனரல்களும் முரண்பட்டுக்கொண்டனர். அதன் விளைவாகவே இரண்டு தலைமைகளும் மோதலில் இறங்கியுள்ளன.
ஆபிரிக்காக் கண்டத்தில் நிலப்பரப்பில் மூன்றாவது மிகப் பெரிய நாடாகிய சூடானில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கின்ற சண்டைகளில் உலக சுகாதார அமைப்பின் உத்தேச மதிப்பீடுகளின்படி குறைந்தது 420 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர்.வெளிநாட்டு ராஜதந்திரிகள், மனிதாபிமானத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளது வாகன அணிகள் தாக்கப்பட்டுள்ளன. பிரதான மருத்துவமனைகள் செயலிழந்துள்ளன. தலைநகர் காட்டூமில் தண்ணீர், மின்சாரம், இன்ரநெற் என்பன துண்டிக்கப்பட்டுள்ளன.
ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ (Mohamed Hamdan Dagalo) தலைமையில் செயற்படுகின்ற -சுமார் ஒரு லட்சம் பேரைக் கொண்ட - ஆர்எஸ்எப் துணைப்படையை (Rapid Support Forces - RSF) நாட்டின் தேசிய இராணுவத்தோடு இணைப்பது என்ற இணக்கப்பாட்டிலும் இரு ஜெனரல்களும் முரண்பட்டுக்கொண்டனர். அதன் விளைவாகவே இரண்டு தலைமைகளும் மோதலில் இறங்கியுள்ளன.
ஆபிரிக்காக் கண்டத்தில் நிலப்பரப்பில் மூன்றாவது மிகப் பெரிய நாடாகிய சூடானில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கின்ற சண்டைகளில் உலக சுகாதார அமைப்பின் உத்தேச மதிப்பீடுகளின்படி குறைந்தது 420 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர்.வெளிநாட்டு ராஜதந்திரிகள், மனிதாபிமானத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளது வாகன அணிகள் தாக்கப்பட்டுள்ளன. பிரதான மருத்துவமனைகள் செயலிழந்துள்ளன. தலைநகர் காட்டூமில் தண்ணீர், மின்சாரம், இன்ரநெற் என்பன துண்டிக்கப்பட்டுள்ளன.
நகர வாசிகள் வீடுகளில் முடங்கியுள்ளனர். முஸ்லிம்களின் புனித நோன்பை ஒட்டி இருதரப்புகளும் இணங்கி அறிவித்த மோதல் தவிர்ப்பு இடைநடுவே குழம்பியதை அடுத்து தலைநகரில் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
சூடான் ஏழு நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்று. அங்கு தங்கம் முதல் யூரேனியம் வரை வளங்கள் நிறைந்து கிடப்பதே அந்த நாட்டின் ஸ்திரமற்ற பலவீனமான நிலைமைக்குக் காரணமாக உள்ளது. தங்கச் சுரங்கங்கள் பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையும் சூடானின் உள்நாட்டுப் பாதுகாப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNHoHAALrrnGD60xgKEI2aOYNGbfc6MU_PAf6qEkGORS65mF5i-uZGnf8m2u9yoabXnwXmDeXkzfC4aL9Dg7eolrmKQo2FBPsyBQvtOuepYBzXL1eoNwz-HUWzZJ5C2B4xrEoXZtEYUT5Js75zKW9qKkLSPdVc4ZULETBC7PAAux8yqkk7syQJTzcr/s16000/e1ea69_3fddcd70fc4649b68e0eedd4f0ca62e3~mv2.jpg)
சூடான் 1956 இல் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு 1958,1969,1985 1989,2019,2021 எனத் தொடராகச் சதிப் புரட்சிகள் பலவற்றைக் கண்டு வருகின்றது. இன்னமும் அங்கு ஒரு ஸ்திரமான ஆட்சியை நிறுவ முடியாத நிலை நீடிக்கின்றது.
முன்னாள் அதிபர் உமர் அல் பஷீரின் அதிகார வீழ்ச்சிக்குப் பின்னர் சூடான் நாடு ஜனநாயக வழியிலான ஓர் ஆட்சி முறைக்குத் திரும்பும் என்று நிலவி வந்த நம்பிக்கை அடியோடு இல்லாமற் போக, தற்போதைய மோதல்கள் நீண்ட காலம் நீடிக்கக் கூடிய ஓர் உள்நாட்டுப் போராக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.