![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD6489g-gRCi3QWLEynsP9BXMRnuIuuikw1U14Q12bnqFJ-nYVdOWH87T2SbWwjoOTVrvxmDg9WTeNOsF0ykeS0FBa8emSZFZ1jFfuvZzGnUJOgYPl44V2gjc21LOnXqM5jFFBwH8TT2iigiq3ImuuAU-F8GA3KgwBFyN_w7F-dwKFOTE7n9PRvUHM/s16000/e1ea69_56b260e7a89e4c4fa25db38d36503727_mv2.jpg)
பிரான்ஸின் உணவு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (l’Agence nationale de sécurité sanitaire de l’alimentation, de l’environnement et du travail - Anses) இந்த எச்சரிக்கைத் தகவலை வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறது. நிறுவனத்தின் இந்த ஆய்வுத் தகவல் நாம் குடிக்கும் தண்ணீரில் இதுபோன்ற மேலும் பல நச்சுப் பதார்த்தங்கள் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
சுவிஸ் நாட்டின் இரசாயனப் பொருள் தயாரிப்புக் குழுமமாகிய'சின்ஜென்ரா' (Syngenta) கம்பனியால் தயாரிக்கப்பட்டு 2020 வரை ஐரோப்பா எங்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த "குளோரோதலோனில்" (chlorothalonil) என்ற பூஞ்சை கொல்லி மருந்தின் தடயங்களே குடி தண்ணீரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு மேலதிகமாகக் கலந்திருப்பது தண்ணீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சின்ஜென்ராவால் "பிறவோ" (Bravo) என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் விற்கப்படும் 'குளோரோதலோனில்' , பார்லி அரிசி மற்றும் கோதுமை, உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்களில் பூஞ்சை மற்றும் பூஞ்சைக் காளான் ஆகியவற்றைத் தடுப்பதற்கான சிறந்த பூச்சி கொல்லி மருந்தாக 1970 முதல் 2020 இல் தடைசெய்யப்படும் வரை அமோகமாக விற்பனையாகி வந்த ஒரு தயாரிப்பு ஆகும்.
நிலத்தடி நீர் மாசுபடுவது பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்தப் பூச்சிக் கொல்லி மருந்து புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மதிப்பாய்வு முடிவு செய்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
குளோரோதலோனில் மூலம் எலிகள் மற்றும் சுண்டெலிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் அது சிறு நீரகக் கட்டிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டது. அத்துடன் குளோரோதலோனில் தரையில் கலந்ததால் காட்டுத் தேனீ எனப்படும் நிலத்தடி கூடுகளில் வாழும் பெரிய தேனீ இனம் முற்றாக அழிந்து போனது என்று பிரான்ஸின் உணவு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் முன்னர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
சுவிஸ் நாட்டின் சின்ரென்ஜா விவசாயக் களைகொல்லி உற்பத்தி நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு சீனாவின் ChemChina என்ற நிறுவனம் 43 பில்லியன் டொலர்களுக்கு வாங்கியது. குளோரோதலோனிலை புற்றுநோயுடன் தொடர்புபடுத்துகின்ற குற்றச்சாட்டுகளை அது நிராகரித்து வருகிறது. அதன் உற்பத்திகள் உலக நாடுகள் எங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.