தந்தையின் தாகம் தீர்க்கத் தென்னை மரத்தில் ஏறிய 21 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பில் தந்தையின் தாகம் தீர்க்க தென்னை மரத்தில் ஏறிய 21 வயதுடைய இளைஞன் தவறி விழுந்து பலியான சம்பவமொன்று ஞாயிற்றுகிழமை மாலை (11) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் முருகன் கோயில் வீதி, சித்தாண்டியை சேர்ந்த விஜயகுமார் தனுஷன் (வயது-21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 9 ஆம் திகதி தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது தந்தைக்கு உடற்சோர்வுடன் களைப்பும் ஏற்பட்டதால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக மகன் ஏறியுள்ளார்.

மரத்தில் ஏறிய மகன் தந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே தவறி விழுந்து உணர்விழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவில் தலையும் கழுத்தும் பலமாக தாக்குண்டு மூளை வீக்கமடைந்து உள்ளக இரத்தக்கசிவு ஏற்பட்டதால் மரணம் சம்பவித்திருப்பது கண்டறியப்பட்டது. சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post