இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!!

கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று(11.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப்போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் கோசிகன் (33 வயது) என்பரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்ததில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post