பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள்! (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று (10) நாய் கடிக்கு உள்ளான ஒருவர் சிகிச்சைக்காக சென்றிருந்த போது எவ்வித சிகிச்சைகளும் வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் சிகிச்சைக்குச் சென்ற நபரை நாளை வருமாறு திரும்பி விட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இயங்கும் மண்டபத்துக்குள் நாய்களின் நடமாட்டங்களும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் பிரிவில் சுமார் 8 தாதிய உத்தியோகத்தர்கள் ஒன்றாக இருந்து உரையாடிக் கொண்டிருந்த நிலையிலும் அம் மண்டபத்துக்குள் நாய்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.

தற்போது வைத்தியசாலையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்லக் கூடிய வைத்திய அதிகாரி இது தொடர்பில் கவனம் செலுத்தாது வைத்தியசாலைக்கான புதிய கட்டடங்கள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இவ் வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய மருத்துவர், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டினை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றவரும் பொறுப்பின்றி நடந்து கொள்வதாகவும் குறித்த வைத்தியர் இப் பொறுப்புக்குத் தகுதி இல்லாதவர் எனவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், பராமரிப்புக்கள், வைத்திய சேவைகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் கவனம் எடுத்து, அக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post