யாழ்.அத்தியடி வீதியில் குப்பை போட வந்தவரைத் தடுத்த சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

யாழ். நகர்ப் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு வந்த நபர், அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி, அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதர பரிசோதகர் சிகிக்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அதற்கு அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவ்விடத்தில் குப்பை போட வேண்டாம் என்று யாழ்.மாநகர சபையினால் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொறுப்பற்ற விதத்தில் அதிகளவானவர்கள் அங்கு தினமும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.



இவ்வாறு அறிவித்தலை மீறி குப்பை கொட்டுபவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையினை அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய தினம் தாக்குதலுக்குள்ளான சுகாதார பரிசோதகர் இதுவரையில் 70 ற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 6332 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் வந்தவர் அங்கு குப்பைகளை கொட்டியுள்ளார். இதனை தடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய முற்பட்ட போதே பொது சுகாதார பரிசோதகர்தாக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post