கனடாவில் பெரும் வாகனப் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம்! குடும்பத்துடன் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட பிரதமர்!!

  • குமாரதாஸன். பாரிஸ்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரதுஒட்டாவா வதிவிடத்தை விட்டுப் பாதுகாப்பான பகுதி ஒன்றுக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார். தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதையும் வைரஸ் சுகாதார விதிகளையும் தொடர்ந்து எதிர்த்து வருவோர், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்டு பெரும் வாகனப் பேரணியாகத் தலைநகரத்தை வந்தடைந்துள்ளனர்.

கனடா - அமெரிக்கா எல்லையைக் கடக்கின்ற கனரக வாகனங்களது சாரதிகளுக்குத் (truckers) தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் அறிவிப்பை பிரதமர்ட்ரூடோவின் அரசு கடந்த மாதம் விடுத்திருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாரதிகள் ஆரம்பித்த "சுதந்திர வாகனத் தொடரணி" என்ற போராட்டமே தற்போது நாடளாவிய எதிர்ப்புப் போராக மாறித் தலைநகர் வரை அணிவகுத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற நாட்டின் தொலைதூர மாகாணங்களில் இருந்தும் வாகனங்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் தாண்டி வந்து தலைநகரப் பேரணியில் இணைந்துள்ளன.
 
கடும் பனிக் குளிர் காலநிலை எச்சரிக்கைக்கு மத்தியில் கால்நடையாக வந்த ஆயிரக்கணக்கானோர் ஒட்டாவாவில் பிரதமர் அலுவலகம் நாடாளுமன்றம் என்பன அமைந்துள்ள இடங்களுக்கு அருகே (Parliament Hill) திரண்டுள்ளனர்.

வாகனங்களின் நீண்ட அணிகள் பெரு வீதிகளை நிறைத்துள்ளன.சனிக்கிழமை மாலை வரை அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. அமைதியான முறையில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.பின்னராக நேற்று  ஞாயிற்றுக்கிழமை அவர்கள் ஓர் ஊடகச் சந்திப்பையும் மகஜர் கையளிப்பையும் நடத்தியுள்ளனர். 
 
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்க முயலும் சக்திகள் தொடர்பில் பொலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் ட்ரூடோவும் அவரது குடும்பத்தினரும்
எங்கே என்று குறிப்பிடப்படாத ரகசிய இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்  என்பதைப் பொலீஸார் உறுதிசெய்துள்ளனர்.

வாகனப் பேரணியினரை பிரதமர் ட்ரூடோ"மிகச் சிறிய சிறுபான்மையினர் (small fringe minority) என்று முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால்" சுதந்திர வாகனப் பேரணி"(Freedom Convoy) சுமார் 45 மைல்கள் தூரத்துக்கு நீண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒட்டாவா தேசிய போர் நினைவிடத்துக்கு (Ottawa's National War Memorial) அருகே நிறுத்தப்பட்டிருந்த டசின் கணக்கான டிராக்டர் வாகனங்களைப் பொலீஸார்
அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

சுகாதார கட்டுப்பாடுகளையும் பிரதமர் ரூடோவையும் கண்டிக்கும் வாசகங்களுடனான சுலோக அட்டைகள் வாகனங்களில் காணப்படுகின்றன.இடைவிடாது வாகன சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

"கோவிட் -19" தொடர்புடைய கட்டுப்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் "கனடாவைக் கம்யூனிசம் கைப்பற்றும்" என்று சில சாரதிகள் கோஷமிட்டனர் என்று "சிபிசி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது.
 
தடுப்பூசிக்கு எதிராக அணிதிரட்டுகின்ற சாரதிகளது நிலைப்பாடு அறிவியலுக்கும் - அரசாங்கத்துக்கும் - சமூகத்துக்கும் எதிரானது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிவருகிறார்.


Previous Post Next Post