பேஸ்புக் காதலனை நம்பிச் சென்ற இரண்டு சிறுமிகள்! மட்டக்களப்பு மற்றும் யாழில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகம்!!


முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இருந்து இரண்டு பதின்ம வயதுச் சிறுமிகள் கடந்த 16.03.2022ம் திகதி அன்று காணாமல் போயிருந்தனர். இந் நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர்கள், பொலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று(18) மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

இரண்டு சிறுமிகளையும் காணவில்லை என பெற்றோரால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் 16.03.2022 அன்று மாலை முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு சிறுமிகளும் நேற்று (18)புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலீசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடிப் பகுதி இளைஞர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து பேசியுள்ளார். செங்கலடி இளைஞன் சிறுமியினை அங்கு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக் காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிசென்று தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை வீடுசெல்ல அழைத்துக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் விட்டுள்ளார். 

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் பான்சிகடை ஒன்றில் பொருட்களை வாங்கியவேளை நள்ளிரவாகியுள்ளது.

இதன்போது இரண்டு சிறுமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவரிடத்திலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Previous Post Next Post