
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
(25/09/2020) பாரீஸிலுள்ள சார்லி ஹெப்டோ அலுவலகம் முன்பு திடீரென ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தியுடன் வெறியாட்டத்தில் ஈடுபட்டார். இருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார்கள்.
இந்த சம்பவம் சார்லி ஹெப்டோ அலுவலகம் முன்பு நடைபெற்றதால், தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டார்களோ என்ற அச்சத்தை அது ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரணம், 2015ஆம் ஆண்டு தீவிரவாதிகள் இருவர் இதே அலுவலகத்தில்
நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்த நேரத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள் உடையில் இரத்தக்காயத்துடன் நடமாடிய ஒருவன் சிக்கினான். அவனது பெயர் அலி (18வயது) என தெரியவந்துள்ளது. அவன் ஒரு சிறுவனாக பாகிஸ்தானிலிருந்து அரசியல் புகலிடம் கோரி பிரான்சுக்கு வந்திருக்கிறான்.
அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயிலில் பயணித்த மற்றொருவனையும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அந்த நபர் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு 33 வயது நபர் என தெரியவந்துள்ளது.
மேலும் இதே சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் மூவரை கைது செய்து விசாரித்து வருவதாக நீதித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin, இந்த சம்பவம் நிச்சயம் ஒரு இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்றார்.
இது நமது நாட்டுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சமுதாயத்துக்கும் எதிரான கோர தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் அவர்.


