பிரிட்டன் இயல்புக்குத் திரும்புவதைத் தடுக்கும் இந்திய வைரஸ்! பிரதமர் கவலை!!


  • குமாரதாஸன், பாரிஸ். 
இந்திய வைரஸ் திரிபு (B.1.617.2) பிரிட்டனில் இயல்பு நிலைமை திரும்புவதை தாமதப்படுத்தக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியத் திரிபின் தொற்றுக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பொதுச் சுகாதார அலுவலகத்தின் தரவுகளின் படி இந்திய வைரஸ் திரிபு தொற்றிய ஆயிரத்து 313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
உள்ளூர் மட்டத்தில் மீண்டும் பொருளாதார, சமூக ரீதியிலான கட்டுப்பாடுகளை அமுல் செய்யவேண்டிய அவசியம் ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் கவலையடைந்துள்ளோம். நாட்டில் அது (இந்திய வைரஸ்) பரவிக் கொண்டிருக்கிறது.." - என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.

".. இந்த வைரஸ் கவலைக்குரியது. விவேகமானதும் எச்சரிக்கையானதுமான
சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம். அதனை உறுதியாக கூற விரும்புகிறேன். 

மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை இன்று அதிகாரிகளோடு கலந்துரையாடித் தீர்மானிக்க இருக்கிறோம். இந்த நிலைமையில் எதனையும் நிராகரித்துவிட முடியாது.. " -இவ்வாறு பிரதமர் கூறியிருக்கிறார்.
 
பிரிட்டன் கொரோனா வைரஸ் கட்டுப் பாடுகள் அனைத்திலும் இருந்து நாட்டை விடுவிக்கின்ற இறுதிக் கட்டத்தை நெருங்கும் சமயத்தில் அங்கு இந்தியாவில் தோன்றிய வைரஸ் திரிபு பரவத் தொடங்கி உள்ளது. 

உள்நாட்டில் தோன்றிய ஒரு புதிய திரிபினால் இங்கிலாந்து நாடு இரண்டாவது அலையில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டுள்ளது.
 
இங்கிலாந்தில் ஏனைய வைரஸ் கிருமிகளின் தொற்றுக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. ஆனால் இந்தியத் திரிபு வைரஸ் நாட்டின் London, Bolton, Tyneside, Nottingham பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட அந்தத் திரிபு உலகில் சுமார் 44 நாடுகளுக்குப் பரவி "உலகளாவிய தொற்றாக" மாறியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

வேகமாகத் தொற்றுகின்ற தன்மை கொண்ட புதிய வைரஸ், தடுப்பூசி களுக்குத் தப்பிவிடுமா என்பதை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இன்னமும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post