“எங்களுக்குக் கொரோனா இல்லை” சிகிச்சை நிலையத்துக்கு வர மறுக்கும் தொற்றாளர்கள்!! -யாழில் சம்பவம்


சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் 10 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தாம் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் மற்றும் அவர்களது எதிர்ப்பு தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனினும் தொற்றாளர்கள் கோவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுத்துவரும் நிலையில் இராணுவத்தினரிடம் அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

தொற்றாளர்கள் 10 பேரையும் கோவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத் துறையினரால் இன்று பிற்பகல் அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

எனினும் தமக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இல்லை எனவும் பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்த அவர்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற மறுத்தனர்.

அத்துடன் தம்மை வற்புறுத்தினால் உயிரை மாய்ப்போம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் தொற்றாளர்களை கோவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளது.
Previous Post Next Post