யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! ஸ்ருடியோ உரிமையாளரின் மனைவியும் கைது!!

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒளிப்படங்களை வெளியிட்டு சிறுமியை பிழையானவராக வெளிப்படுத்த முற்பட்ட வேளை அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கையின் காரணமாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதுடன் மற்றொருவரும் கைது செய்யப்படவுள்ளார் என்று அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் சிறுமியின் ஒளிப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் சந்தேக நபருக்கு சாதகமாக மாற்றப்படவுள்ளமைதொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் சந்தேக நபரின் மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றொருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post