காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய மீனவர்களைக் கைது செய்ய முயற்சி! படகு மூழ்கியதில் ஒருவர் மாயம்!! இருவர் மீட்பு!!!

மீட்கப்பட்ட இருவரும்

எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்ற போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது.

இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கினர் அவர்களில் சுகந்திரன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் படகு ஓட்டி ராஜ்கிரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post