“இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவதே சிறந்தது” தீபாவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர்!


இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவதே சிறந்தது என தீபாவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021ஆம் ஆண்டிற்குரிய ஒளியின் பெருவிழாவான தீபாவளிப் பெருவிழாவை உலகம் முழுவதிலும் கொண்டாடும் இந்து சமய சகோதரர்கள் அனைவர்க்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

குடும்ப உறவுகள் மற்றும் நட்பு வட்டங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எப்போதும் மகிழ்வானவை. அன்பையும் உறவையும் வளர்ப்பவை. இந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்குரிய தீபாவளிப் பெருவிழா உங்கள் குடும்ப மற்றும் நட்பு உறவுகளைப் புனிதப்படுத்தி புதியதாக்கி அன்பையும் புரிந்துணர்வையும் எதிர்கால நம்பிக்கையையும் வளர்த்து ஒளியைத் தரும் ஒருவிழாவாக அமைய வாழ்த்துகிறோம்.

இருளைப் பழிப்பதை விடஒளியை ஏற்றுவதே சிறந்தது. ஒளியை எல்லோரும் விரும்புகிறார்கள். ஒளியில் எல்லோரும் வாழவே விரும்புகிறார்கள். இருளைப் பார்த்து எல்லோரும் பயப்பிடுகிறார்கள். இருள் வேண்டாமென ஓளியை ஏற்றுகிறார்கள்.

இருளுக்கும் ஒளிக்குமானபோராட்டத்தில் ஒளியேவெல்ல வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமானபோராட்டத்தில் நன்மையே வெல்ல வேண்டும். இருள் நிறைந்த துன்பமான வேதனைமிக்க வாழ்வை விடுத்து ஒளிமிகுந்த மகிழ்ச்சியான வாழ்வையே எல்லோரிற்கும் நாம் ஆசிக்கவேண்டும். இதையே நற்செய்திஏடுகள் பின்வருமாறு தெரிவிக்கின்றன.நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்… எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்போதுதான் அதுவீட்டில் உள்ள அனைவர்க்கும் ஒளிதரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணக தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். (மத்தேயு 5:14 -16)

கொரோனா என்னும் இக் கொடிய நோய் உலக மக்கள் அனைவரையும் எந்த வேறுபாடுமின்றி தாக்கி அழித்து வருகிறது. எல்லாமக்களும் ஏதோ ஒருவகையில் இந்தக் கொடியநோயின் விளைவால் தாக்கப்பட்டுள்ளனர். தொழில் துறையின்றி மக்கள் வளம் இழந்து வாழ்கின்றனர். கோலங்கள் கொண்டாட்டங்கள் பயணங்கள் இன்றி மக்கள் வீடுகளில் முடங்கி விரத்திக்குள்ளாகியுள்ளனர். பாடசாலைகள் விளையாட்டுக்கள் என்பன இன்றி மாணவர் சோர்ந்துபோயுள்ளனர்.

இவர்களோடு கூட வாழ்வில் நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழ்வோர் - எல்லாரும் கைவிட்டு வீடுகளிலும் வயோதிப இல்லங்களிலும் தனிமையில் வாடுவோர் - வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் வருத்தத்தில் இருப்போர் - சிறையிலும் தடுப்புமுகாம்களிலும் அல்லற்படுவோர் - அடுத்த நேர உணவு என்ன எனஏங்குவோர் எனப் பலர் உள்ளனர். இவர்களே இன்று இருளில் இருப்பவர்கள். இவர்களுக்கே நாம் இன்று ஒளியேற்ற வேண்டும்.

இவர்களுடைய வாழ்வில் ஒரு தரிசிப்பால் - ஒரு அன்பான வார்த்தையால் - அமைதியான செவிமடுத்தலால் - நம்பிக்கையூட்டும் ஒரு செயலால் - ஒரு சிறிய அன்பளிப்பால் - ஒரு நேர உணவால் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒளியைக் காட்டமுடியுமாயின் அதுவே நாம் கொண்டாடும் சிறந்த அர்த்த முள்ள தீபாவளிப் பெரு விழாவாகும்.

நம் வாழ்வு ஒளியின் வாழ்வாகும். நாம் உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்ற வார்த்தைகளை நம்முடையதாக்கி வாழும் மக்களாவோம். ஒளியின் விழாவில் இறையாசீர் மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என்றுள்ளது.
Previous Post Next Post