பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் வலெரி பெக்ரெஸின் முன்மொழிவு! குடியேறிகளுக்கு அதிர்ச்சி!!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
"சட்டங்களையும் எல்லைகளையும் பேணக் கூடிய ஒரு நாடுதான் தன்னைப் பற்றிப் பெருமைப்பட முடியும். அத்தகைய நாடுதான் சட்டவிரோத குடியேறிகளை அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் திறனைக் கொண்டிருக்கும்.."

-பிரான்ஸின் அதிபர் தேர்தலுக்கு வலதுசாரிகள் தரப்பில் வேட்பாளராகத் தெரிவாகி இருக்கின்ற வலெரி பெக்ரெஸ் அண்மையில் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

பல உள்நாட்டுப் பிரச்சினைகள் இருந்தாலும் ஐரோப்பா எங்கும் அரசியலில் கொதிக்கும் விவகாரமாக இருப்பது எப்போதும் குடியேறிகள் தான். அதுவும் தேர்தல் என்று வந்து விட்டால் வலது, இடது, மையம் என எந்தக் கட்சியாக  இருந்தாலும் அவற்றின் கவர்ச்சிகரமான கொள்கைகளில் முதலிடத்தில் சேர்ப்பது அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான முன்மொழிவுகளையே.

பிரான்ஸில் பெரும் தொற்று நோய்க் காலப் பகுதியில் நடைபெறவிருக்கின்ற அதிபர் தேர்தலில் வெளிநாட்டுக் குடியேற்றம் மீது வெறுப்புணர்வுக் கருத்துக்கள் சூடாகி வருகின்றன.
 
எல்லைகளில் அல்லது எம்பஸிகளில் வைத்தே புகலிடக் கோரிக்கையாளர்களைப் பரிசீலிப்பது, புகலிடம் மறுக்கப்பட்டோரைத் திருப்பி அனுப்புகின்ற விமான சேவையை உடனே ஆரம்பித்தல் , குடும்ப ஒன்றிணைவுகளுக்கான முன் நிபந்தனைகளைக் கடுமையாக்குதல் என்று பல இறுக்கமான கொள்கைகளை தனது தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருக்கிறார் வலெரி பெக்ரெஸ்.

குடியேறிகள் தொடர்பான அவரது கொள்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
  • தொழில் மற்றும் நாடுகள் வாரியாக கோட்டா அடிப்படையில் குடியேறிகளை உள்வாங்கும் வகையில் (quotas by profession and by country) அரசமைப்புச் சட்டம் உருவாக்குதல். அது புகலிடக் கோரிக்கையாளர்களை தூதரகங்களில் அல்லது எல்லையில் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கோரும் வழி முறைகளைக் கொண்டிருக்கும்.
  • நாட்டுக்குள் உள்ள அகதிகள் மற்றும் குடியேறிகளைத் தங்க வைத்துப் புகலிட கோரிக்கைகளை விரைந்து பரிசீலிப்பதற்காகப் பிரத்தியேக முகாம்கள் (dedicated centers) நிறுவப்படும்.அனுமதி மறுக்கப்படுவோரை இலகுவாகத் திருப்பி அனுப்பும் வசதிகளை அது கொண்டிருக்கும்.
  • குடியேறிகளை நாடு திருப்பி அனுப்புவதற்காக Frontex படையின் வாடகைக்கு அமர்த்தும் விமான சேவையை உடனடியாகத் தொடங்குதல். ஐரோப்பிய எல்லை மற்றும் கரையோரக் காவல் படையே "புரொன்ரெக்ஸ்" (Frontex) எனப்படுகிறது. ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புகின்ற விமான சேவைகளை இந்தக் காவல் படையே வழங்கி வருகிறது.
  • நாட்டுக்குத் தீவிரமான அச்சுறுத்தலை வெளிப்படுத்துகின்ற குடியேறிகளை நீதிமன்றங்களில் நிறுத்துவதற்கு முன்காகவே திருப்பி அனுப்புதல். 
  • பெற்றோர் பாதுகாவலர் துணை இன்றித் தனித்து வருகின்ற 16 வயதுக் குட்பட்ட இளம் குடியேறிகள் ,அவர்களது வயதை உறுதி செய்யும் எலும்புப் பரிசோதனைக்குச் (bone test) சம்மதிக்காவிட்டால் அவர்கள் வளர்ந்தோராகவே கணிக்கப்படுவர்.
  • அகதிகள், குடியேறிகளோடு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணை வதற்கான விதிகள். (family reunification) இறுக்கமாக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். குறிப்பாக வருமான வரம்பு அதிகரிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு சமூக நல உதவிகள்(social benefits) நிறுத்தப்படும்.
  • பிரான்ஸில் வதிவிட உரிமை கோருவதற்கு சரளமாகப் பிரெஞ்சு மொழி பேசும் (fluency in French) நிபந்தனை இணைக்கப்படும். 600 மணிநேர பயிற்சியை உள்ளடக்கிய மொழிப் பரீட்சை கட்டாயமாக்கப்படும்.
  • நகரப் புறங்களில் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவினைவாதம் தோன்றுவதைத் தடுப்பதற்காக அடுத்த பத்து ஆண்டுகளில் வீட்டு வசதி வழங்குவதில் புதிய திட்டம் உருவாக்கப்படும். ஒரு மாவட்டத்தில் சமூக வீட்டு வசதி(social housing) வழங்குவது முப்பது வீதத்துக்குள் மட்டுப்படுத்தப்படும்.
  • தேடப்படுவோரைப் பிடிக்க வசதியாக மெற்றோ மற்றும் ரயில் நிலைய நுழைவிடங்களில் முகத்தைப் பரிசீலித்து அனுமதிக்கும் தொழில் நுட்ப வசதிகளை(facial recognition at the entrance to public transport) ஏற்படுத்துதல்.
Previous Post Next Post