பிரான்ஸில் புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தளர்வுகளும்! -முழுமையான விபரம்


  • குமாரதாஸன். பாரிஸ்.
எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாகத் தளர்வான சில கட்டுப்பாடுகளையே அரசு நேற்று  அறிவித்திருக்கிறது. குறிப்பாகப் பாடசாலைகளைத் திங்களன்று திறக்கின்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வருட இறுதி நாளான டிசெம்பர் 31ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு எதுவும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பிரதமரும் சுகாதார அமைச்சரும் நேற்றிரவு செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தனர். 

தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்துக்காகத் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற காலம் குறைக்கப்படவுள்ளது. அதன் விவரங்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் ஊரடங்கு இருக்காது என்றாலும் நின்றவாறு நடத்தப்படுகின்ற களியாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அருந்தகங்களில் (bars et cafés) இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே உண்ணவும் குடிக்கவும் முடியும் என்ற விதியும் (uniquement pour les clients assis) அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சினிமா, தியேட்டர்கள், விளையாடும் இடங்கள், பொதுப் போக்குவரத்து போன்றவற்றில் மென் பானங்களை அருந்துதல், உண்ணுதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளது.(La consommation de boissons et d'aliments sera interdite dans tous les cinémas, les théâtres, les équipements sportifs et les transports collectifs, y compris longue distance)

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முடிவுகள் வருமாறு :
  • முதல் இரண்டு ஊசிகளுக்குப் பிறகு மூன்றாவது டோஸ் ஏற்றிக் கொள்வதற்கான கால இடைவெளி மூன்று மாதங்களாகக் குறைக்கப்படுகிறது.நாளை செவ்வாய்க்கிழமை முதல் அது அமுலுக்கு வருகிறது.
  • போலி சுகாதாரப் பாஸ்களைப் பயன்படுத்துவோருக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்படவுள்ளன.
  • வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது ஜனவரி 3ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.குறைந்தது மூன்று வாரங்களுக்கு அது நடைமுறையில் இருக்கும். 
  • ஒன்று கூடுவோரது எண்ணிக்கை மீணடும் வரையறை செய்யப்படுகிறது. உள் பகுதிகளில்(intérieur) 2,000 பேருக்கும் வெளிப் புறங்களில் (extérieur) 5,000 பேருக்கும் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
  • அரசியல் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒன்று கூடுவதற்கு எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது.
  • நின்றுகொண்டு செய்யப்படுகின்ற (Les concerts debout) களியாட்டங்கள் மற்றும் இன்னிசை நிகழ்வுகள் தடை செய்யப்படுகின்றன. புதுவருட வாழ்த்து வரவேற்பு நிகழ்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முழுவதும் தடைசெய்யப்பட்டிருக்கும்.
Previous Post Next Post