பிரான்ஸ்-பாரிஸில் முற்றாக முடங்குகிறது ரயில் சேவைகள்!

பாரிஸ் பிராந்தியப் போக்குவரத்து சேவை நிறுவன ஊழியர்கள் (La Régie autonome des transports parisiens-RATP) மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்டப் பணிப் புறக்கணிப்புக் காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை(நவ.10) நகரின் பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக முடங்கவுள்ளன.

அன்றைய தினம் பாரிஸ் நகர மெற்றோ ரயில் வலைப் பின்னல் அடங்கலாக RER A மற்றும் B ரயில் சேவைகள் தீவிரமாகத் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து பணிபுரியுமாறும் (teleworking) பயணங்களைத் ஒத்திவைக்குமாறும் RATP நிறுவனம் நகரவாசிகளைக் கேட்டிருக்கிறது.

நகரில் பஸ் மற்றும் ட்ராம் சேவைகளும் (bus-tram network) கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவை ஊழியர்களது ஐந்து தொழிற்சங்கங்கள் ஊதியத்தை மீளாய்வு செய்து அதிகரித்தல், போதிய பணியாளர்களை நியமித்துப் பணிச் சூழலை இலகுவாக்குதல் உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றன. வியாழனன்று (நவ.10) நடைபெறுகின்ற வேலை நிறுத்தம் மெற்றோ ரயில்கள் மற்றும் RER ரயில் சேவைகளை"முற்றாக நிறுத்துதல்" ("zero metro, zero RER") என்ற கோஷத்தின் கீழேயே நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே ரயில் சேவைகள் பலவும் அன்றைய தினம் முற்றாகச் செயலிழக்கச் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post