திருமணமான காதலன் உட்பட மூவரினால் மதுபானம் பருக்கிப் 15 வயதுச் சிறுமி வன்புணர்வு!

இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்தி பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான இந்த சந்தேக நபர் இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பின்னர், சந்தேக நபரின் இரண்டு நண்பர்கள் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

24 வயதான சந்தேக நபர் ஆரம்பத்தில் 15 வயதான சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்ததால், அவர் அருகில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பாட்டி வெயிலில் காயவைப்பதற்காக மிளகாய்களை சிறுமியிடம் கொடுத்துள்ளார்.அதனை காயவைக்க சென்ற போது, காதலன் எனக்கூறப்படும் 24 வயதான நபர், மேலும் இரண்டு பேருடன் வந்து சிறுமியை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன் ஏனைய இருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து பாட்டியின் வீட்டுக்கு அருகில் கைவிட்டு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பாட்டியின் வீட்டுக்கு சென்ற சிறுமி மதுபோதையில் ஆபாச வார்த்தைகளை கூறிக்கொண்டு பதற்றமாக நடந்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைகளை மேற்கொண்டு சிறுமியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி வழங்கிய தகவல்களுக்கு அமைய சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இரண்டு பேரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post