இருளில் மூழ்கப் போகும் இலங்கை! பாரிய அளவில் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்!!

நிலக்கரி பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் போனால், எதிர்வரும் காலங்களில் நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 10 நிலக்கரி கப்பல்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த ஆண்டு நிலக்கரி இல்லாமல்போகும் நிலை அதிகமாக உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதமளவில் இந்த பிரச்சினை மேலும் அதிகரித்து, பொறியியலாளர்கள் சங்கம் கூறுவதை போன்று, நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து எந்த விதத்திலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், அவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு இடம்பெறுமாயின், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர், பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் தலைவர் மாலக விக்ரமசிங்க, மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.

மாதாந்தம் 90 அலகுகளுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பத்தினரை இலக்கு வைத்தே இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறான 50 இலட்சம் மின் பாவனையாளர்கள் உள்ளனர்.

அவர்கள் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post