யாழில் பெண் அடித்துக் கொலை! நாட்டில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் கணவனை பிரிந்து ஒரு பெண் பிள்ளையுடன் வாழ்ந்து வந்த 55 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுக்கு இலைகுலைகளை வெட்டுவதற்காக நாளாந்தம் வருகின்ற ஒருவரே இந்த கொலையை புரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கலாநதி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

கொலையுண்ட பெண்ணுடன் குறித்த நபர் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியில் சென்று பார்த்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்த அதேநேரம், தமது தாய் இரத்தம்தோய்ந்த நிலையில் கிடந்ததாகவும் அவரது மகள் தகவல் வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இக் கொலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post