முல்லைத்தீவில் மது அருந்திய போது ஏற்பட்ட முரண்பாடு! நண்பனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்த மூவர் கைது!!

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடையர்கட்டு வெள்ளப்பளத்தினை சேர்ந்த 21 வயதுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த வேளை நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்படுவதாக பொலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளன. வாக்குமூலங்களின் அடிப்படையில் பொலீஸ் விசாரணையினை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.

இவர்களை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post