பிரான்ஸில் கடும் வரட்சி; மழை வேண்டி விவசாயிகள் பாரம்பரியச் சடங்கு! 150 ஆண்டுகளின் பின்பு புத்துயிர் பெற்ற நிகழ்வு!!

எங்கள் ஊர்களில் மழைவேண்டிக் கொடும்பாவி எரிக்கின்ற நிகழ்வுகளை சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறோம் ஐரோப்பிய நாடுகளிலும் அதேபோன்ற சடங்குகள் விவசாயிகள் மத்தியில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.

காலப்போக்கில் அவை அருகி மறைந்து போயின.ஆனாலும் இயற்கையிடம் தோற்றுப் போய்க் கொண்டிருக்கின்ற மனிதன் மீண்டும் வேறு வழி இன்றிப் பழைய மரபுகளை -நம்பிக்கைகளை - நாடுகின்றான்.

பிரான்ஸின் தென் பகுதி மாவட்டம் ஒன்றில் விவசாயிகள் மற்றும் ஊர் மதப் பெரியவர்கள் ஒன்று கூடி மழை பெய்ய வேண்டிப் பாரம்பரியச் சடங்கு ஒன்றை நடத்தியுள்ளனர்.

புனிதர் கௌடெரிக்(Saint Gaudérique) என்று அழைக்கப்படும் "தண்ணீர் தெய்வத்திடம்" மழை பெய்விக்குமாறு வேண்டி அவரது சிலையையும் புனிதப் பொருள்களையும் விவசாயிகளும் கத்தோலிக்க மதப் பெரியவர்களும் சேர்ந்து வீதிகளில் ஊர்வலமாகச் சுமந்து சென்றுள்ளனர்.

பெர்ப்பினியன்(Perpignan) என்ற பழைய நகரத்து தேவாலயம் ஒன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் அங்குள்ள ரெட் (Têt) என்ற நதிக் கரையில் முடிவடைந்தது. பின்னர் விவசாயிகள் நான்கு பேர் புனிதரின் பொருள்களைச் சுமந்தவாறு வற்றிய நதி நீரில் இறங்கி நடந்து சென்றனர். மதத் தலைவர்கள் அங்கு சமய அனுட்டானங்களை மேற்கொண்டனர்.

நூற்றுக்கணக்கான விவசாயிகள் உட்படப் பொது மக்களும் சடங்கில் கலந்து கொண்டனர்.

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற இயற்கையை வேண்டுகின்ற ஒரு சடங்கு நடைபெற்றிருப்பது பற்றிய இந்தச் செய்தியையும் படங்களையும் நாட்டின் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டிருக்கின்றன.

பிரான்ஸின் பல பகுதிகளை இந்த முறை குளிர்காலத்து வரட்சி கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நதிகள், நீர்நிலைகளில் போதியளவு தண்ணீர் தங்கவில்லை.

குளிர்காலத்தில் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டால் அடுத்து வருகின்ற காலபோகத்தில் பயிர்ச் செய்கை பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.

ஸ்பெயினின் எல்லையோரமாக அமைந்திருக்கின்ற பிரான்ஸின் கட்டலோன் பிராந்திய விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் மழை இன்றி வரட்சியால் கடும் சவால்களைச் சந்தித்துள்ளனர்.விவசாயம் செய்ய நீர் இல்லை. பயிர்நிலங்கள் வரண்டு கிடக்கின்றன. நதிகளில் தண்ணீர் கால்பாதம் வரை வற்றிவிட்டது.

பிரெனி ஒறியன்ரே (Pyrénées-Orientales) மாவட்டத்தில் இந்த முறை குளிர் காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக ஆகப் பத்து மில்லி மீற்றர் மழையே பதிவாகி உள்ளது.

மழையை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்த பெர்ப்பினியன் பழைய நகரத்து (old Perpignan) விவசாயிகளே வேறு வழியின்றி இந்தப் பாரம்பரியச் சடங்கு முறையை நாடியுள்ளனர்.

அங்கே கடந்த 150 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இவ்வாறு மழை நீர் வேண்டும் புராதன சடங்கை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தேவாலய குரு ஒருவர் தெரிவித்துள்ளார். வழக்கு ஒழிந்து போயிருந்த அந்த சமயச் சடங்கைப் பார்வையிடுவதற்காக இளம் விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் அங்கு வந்து பங்குபற்றியிருந்தனர்.

கட்டலோனியாவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் கௌடெரிக் என்பவர் அங்குள்ள உழவர்களால் தங்களது காவலனாக மதிக்கப்பட்டு வணங்கப்பட்டவர். வரட்சி ஏற்படும் சமயங்களில் மழையை வரவழைக்கின்ற அதிசயங்களைப் புரிந்தவர் என்று புராணக்கதைகள் கூறுகின்றன.

கௌடெரிக் இளைஞனாக இருந்த போது அக்காலத்து நிலப் பிரபுக்களிடம் இருந்து உழவர்களைப் பாதுகாத்தார். அவர்களது தண்ணீர் பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வு வழங்கினார். மழையை வரவழைக்கும் பல்வேறு அதிசயங்களைப் புரிந்தார். புதிய நீர் ஊற்றுக்களை உருவாக்கினார். அதனால் கற்றலோன் மக்கள் அவரை மதித்துப் புனிதராகக் கொண்டாடி மகிழ்ந்தனர்- என்று சொல்லப்படுகிறது. அந்த நம்பிக்கைப் பாரம்பரியம் இப்போதும் தொடர்ந்து வருகிறது.

வரட்சிக்காலங்களில் புனிதர் கௌடெரிக்கிடம் மழையைப் பெய்விக்குமாறு வேண்டி அவரது உருவச் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுட்டானங்கள் செய்கின்ற தொன்மையான வழக்கமே இன்றைக்கு - 150 ஆண்டுகளுக்குப் பிறகு - மீண்டும் அங்கேயுள்ள விவசாயிகள் சமூகத்தினரால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Previous Post Next Post