பிரான்ஸில் குடும்ப உதவி நிதி பெறுவதில் மோசடி! பயனாளிகளது விமானப் பயணங்கள் கண்காணிக்கப்படும்!!

பிரான்ஸில் உதவிப் பணம் பெற்றுக் கொண்டு வெளி நாடுகளில் போய்க் காலம் கழிப்பது இனிமேல் சாத்தியமாகப்போவதில்லை. அரசினால் வழங்கப்படுகின்ற குடும்ப உதவிக் கொடுப்பனவு (les allocations familiales) உட்பட சமூகப்பாதுகாப்பு நல உதவிகளைப் பெறுவதில் மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து அதனைத் தடுப்பதற்காகப் பயனாளிகள் தொடர்பில் புதிய பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.

பிரான்ஸ் மண்ணில் வாழும் ஒருவர் சமூக நல உதவிக் கொடுப்பனவு களைப் பெற்றுக் கொள்வதாயின் குறைந்தது ஆறு மாதங்கள் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பது தற்போதைய விதி ஆகும். விரைவில் அது ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப் படவுள்ளது என்ற தகவலை பொது நிதி தொடர்பான அமைச்சர் கப்ரியேல் அட்டால் வெளியிட்டிருக்கிறார்.

"தேசிய ஐக்கியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற இந்த நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் வயோதிப காலக் கொடுப்பனவு (le minimum vieillesse) அல்லது குடும்ப நிதி உதவி (les allocations familiales) வழங்கும் போது குறைந்தது ஆறு மாதங்கள் மண்ணில் வசிப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் பரிசோதிக்கப்படு கின்றன. அதேபோன்று வீட்டு வாடகை உதவி நிதி (APL - aides personnalisées au lodgement) வழங்கும் போது பயனாளி எட்டு மாதகாலம் நாட்டில் தங்கியிருந்தது உறுதிப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சகல உதவிக் கொடுப்பனவுகளையும் பெறுவதற்கு ஒருவர் குறைந்தது ஒன்பது மாத காலம் நாட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவதற்கு அரசு விரும்புகின்றது.

கொடுப்பனவு பெறுகின்ற பயனாளி ஒருவர் மீது சந்தேகம் ஏற்படும் இடத்து அவர் நாட்டில் தங்கியிருந்தாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பிஎன்ஆர் பதிவேடு(PNR file) என்கின்ற விமானப் பயணிகளது பெயர்ப் பதிவேடுகள் (Passanger Name Record) உட்படப் பயண ஆவணங்களையும் பரிசோதிக்கின்ற விதமாகப் புதிய திட்டம் ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பலர் மாதக் கணக்கில்,வருடக் கணக்கில் நாட்டுக்கு வெளியே தங்கி இருந்து கொண்டு பிரான்ஸில் வாழ்வதாகக் காட்டி சமூக உதவிக் கொடுப்பனவுகளைப் பெற்றுவருகின்றனர். அத்தகையோரை அடையாளம் காண்பதற்காக ஏனைய நாடுகளைப் போன்றே நாமும் சட்டங்களை இறுக்கவுள்ளோம் - என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய அரசாங்கப் பேச்சாளர் ஒலிவியே வேரன் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், உதவிக் கொடுப்பனவுகளை ஐரோப்பிய வங்கிகள் தவிர்ந்த ஏனைய வங்கிக் கணக்குகளுக்கு (non-European bank accounts) வழங்குவதை அரசு எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் தடைசெய்யவுள்ளது. பிரான்ஸில் வசிக்கின்ற வெளிநாட்டவர்கள் - குறிப்பாக ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் இங்கே பெறுகின்ற சமூக நிதி உதவிக் கொடுப்பனவுகளைத் தங்கள் சொந்த நாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி தற்சமயம் உள்ளது. அதேபோன்று பல மாத காலம் தங்கள் சொந்த நாடுகளில் தங்கியிருந்து விட்டுக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக மட்டும் பிரான்ஸுக்கு வந்து தங்கள் இருப்பை உறுதிசெய்து விட்டு மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டவர்களும் உள்ளனர்.

இவ்வாறு முறைகேடாகவும் மோசடியாகவும் பெறப்பட்ட உதவிக் கொடுப்பனவுகளது மொத்தப் பெறுமதி கடந்த ஆண்டு மட்டும் 351 மில்லியன் ஈரோக்கள் ஆகும் என்று அரசு அறிவித்துள்ளது.
Previous Post Next Post