2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சையை நாடவும்!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

தினசரி நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் தனிநபர்கள் போதுமான ஓய்வு பெறுவது அவசியம் என்று அவர் கூறினார்.

யாராவது பணியில் இருந்தால் அல்லது பாடசாலைக்குச் சென்றால், அவர்கள் சில நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.

இரண்டாவது மிக முக்கியமான விடயம் திரவ உட்கொள்ளலை அதிகரிப்பது என்று அவர் தெரிவித்தார்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமோல் மருந்தை உட்கொள்ளலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் டிஸ்பிரின், ஆஸ்பிரின் அல்லது இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.

சில சமயங்களில் அது உயிரிழப்பாக கூட இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது நாளில் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால், தனிநபர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மருத்துவர் அலுத்கே வலியுறுத்தினார்.
Previous Post Next Post