ஒமிக்ரோன் தொற்றின் அச்சுறுத்தல்! - பிரித்தானியாவில் கட்டாயமாகும் நடைமுறைகள்


ஒமிக்ரோன் வைரசை எதிர்கொள்வதற்காக, வர்த்தக நிலையங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசங்கள் கட்டாயமாக அணியப்பட வேண்டும் என பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் PCR சோதனைகளை மேற்கொண்டு முடிவு வரும் வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு முன்பு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஒரு பூஸ்டர் வழங்கப்படும் என தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு குழுவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது குடும்பத்தினருடன் நத்தார் தினத்தை கொண்டாட முடியும் என்பதை உறுதிப்படுத்த, இந்த நடவடிக்கைகள் உதவும் என சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றமடைக்கின்ற சூழலுக்கு ஏற்ப அரசாங்கம் விரைவாக செயல்படுவதா தெரிவித்துள்ள ஜாவிட், எனினும் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் திரிபு குறித்த அச்சம் தலைதூக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் இதுவரையில் 22 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி இறுதிக்குள் இங்கிலாந்தில் தகுதியுடைய அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இங்கிலாந்தில் மட்டும் 14 மில்லியன் பெரியவர்கள் இப்போது பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதி பெற்றுள்ளனர் என ஜோன்சன் மேலும் கூறினார்.
Previous Post Next Post