நீண்ட காலத்தின் பின் யாழில் மலேரியா நோயாளி அடையாளம்!!


யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு மருத்துவ அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

தொற்றுக்குள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் அ.ஜெயக்குமாரன் கேட்டுள்ளார்.
Previous Post Next Post