![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPnP_SwJ-q7J5eT3eJWGSBt2SgSefVoYPp4iw8nQu28mn7dCbk_64nEmrGvRa_WD-MO83dVWfigSs-TbQ9I1ubt2PPVc2mq0N9YRvzDUskFuRRGDIH-2urZEOBST-Z4IUAoM4Q5EyrP5G5kTKwzPXZVRX_GNoEKDmru5QF_Y4XfGB6DUV4DwqcXeR9/s16000/1658145598641.jpg)
வேலையற்றிருப்பவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் வதிவிட உரிமையற்றிருப்பதால் வேலைகள் பெறுவது கடினமாகவுள்ளது. இதன் காரணமாகவே வதிவிட அனுமதி வழங்குவது தொடர்பில் அரசு கவனம் எடுத்துள்ளது.
பிரான்ஸில் சுமார் 4 இலட்சம் வேலையிடங்கள் வெற்றிடமாகவுள்ளது. இதனால் இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேலையாட்கள் தேவைப்படுகின்றது. இதன் காரணமாகவே வதிவிட உரிமையற்றோர் குறித்த இடங்களில் பணிக்கமர்த்தப்பட்டால் அவர்களுக்கு இந்த தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வதிவிட உரிமை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வதிவிட அனுமதி வேலைகளுக்கு என வருபவர்களுக்கு மட்டும் ஒரு வருட தற்காலிக வதிவிட உரிமை வழங்குவதற்கு அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றிடமாகவுள்ள பணிகளுக்கு பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்படும் பட்சத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக ஒரு வருட வதிவிட அனுமதி வழங்கபடும் என்றும் குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ஒரு வருடத்தில் அவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத் துறை மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் பணி வெற்றிடங்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்விடங்களில் வேலை செய்வதற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களின் முதலாளிகள் ஊடாக சரியான காரணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் இவ் தற்காலிக வதிவிட உரிமை வழங்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் யாவும் முதலாளிகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்ஸின் உள்துறை அமைச்சர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் ஆகியோர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.