கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 9 பேர் தமிழக விடுதிகளில் கைது!

தமிழகத்தின் வேளாங்கண்ணி பகுதியிலிருந்து கடல்மார்க்கமாக கனடா செல்ல தயாராக இருந்ததாக நம்பப்படும் இலங்கை அகதிகள் குழுவொன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வேளாங்கண்ணி பகுதிகளிலுள்ள விடுதிகளில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அகதிகள் கனடா செல்லும் நோக்கத்துடன் வேளாங்கண்ணி விடுதிகளில் தங்கி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நாகப்பட்டினம் கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், ஆய்வாளர் இராமச்சந்திரபூபதி ஆகியோர் தலைமையிலான கியூ பிரிவு காவல்துறையினர் வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான விடுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

இதில் 5 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

லோகநாதன் கேனுஜன் (34) குளத்துவாய்ப்பட்டி முகாம், தூத்துக்குடி மாவட்டம், ஜெயராஜ் ஜெனிபர்ராஜ் (23) கெலவர் பள்ளி முகாம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

ஜெயராஜ் தினேஷ் (18) கெலவர் பள்ளி முகாம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

ஜெயராஜ் புவனேஸ்வரி (40) கெலவர் பள்ளி முகாம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

விக்னராஜா துஷ்யந்தன் (36) திருட்டுத்தனமாக இந்தியா வந்தவர்- வேல்முருகன் தெரு, கீழ்ப் புதுப்பாக்கம், செய்யாறு

வேளாங்கண்ணி எமிரேட்ஸ் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் செல்வராஜ் சதீஸ்வரன் (32) குடிமல்லூர் அகதிகள் முகாம், திருமலைச்சேரி, வாலாஜாவட்டம், வேலூர் என்பவரும் கைதாகினர்.

மேலுமொரு விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 3 பேர் கைதாகினர். அவர்களின் விபரம் இதுவரை கிடைக்கவில்லை.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செயயப்படாத விசைப்படகில் தப்பிச் செல்ல திட்டமிட்டதும், பயணத்திற்காக 17 இலட்சம் ரூபா பேசி தீர்மானிக்கப்பட்டதும் தெரிய வந்தது.

படகுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த 17 இலட்சம் ரூபா பணமும் விடுதியில் இருந்து மீட்கப்பட்டது.

செல்வத்தை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவரது படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம் கடல் வழியாக இலங்கைக்கு செல்லவே திட்டமிட்டிருந்தாக தெரிவித்தனர்.

எனினும், இலங்கைப் பயணத்திற்கு 17 இலட்சம் ரூபா பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லையென்பதால், கைதானவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான லோகநாதன் கேனுஜனின் முறைப்பாட்டின் அடிப்படையில் படகு உரிமையாளர், பயணத்திற்கு முகவர்களாக செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படகு பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களையும், படகில் பயணிக்க வந்து விடுதிகளில் தங்கியுள்ளவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post